வியாழன், 12 மே, 2011

இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள்


இதய நலம் பற்றிப் பேசும்போது, உடல் ஆரோக்கியத்தோடு மிக மிக நெருக்கமான தொடர்புடைய உணவுப் பழக்கம் பற்றியும் நாம் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
நமது உடல் நலமும், மனநலமும் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன. நாம் சாப்பிடும் உணவின் தன்மை மற்றும் அளவை அடிப்படையாகக் கொண்டுதான் நம்முடைய வாழ்க்கை அமைந்துள்ளது. எனவேதான் ஆங்கிலத்தில் You are what you eat என்று சொல்வார்கள். அதாவது நீ சாப்பிடும் உணவின் தன்மைத்தான் நீ யார் என்று தீர்மானிக்கிறது என்று பொருள்.
நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களைச் சர்க்கரைப் பொருள்கள் புரதம், கொழுப்புச்சத்து, உயிர்ச்சத்து, தாது உப்புகள் என பலவகைகளாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் இனி விளக்கமாகப் பார்க்கலாம்.
கொழுப்புச் சத்து
கொழுப்புச் சத்து என்பது நீரில் கரையும் இயல்புடையது. அதே சமயம் ஆல்கஹால், ஈதல் போன்றவற்றிலும் கரையக் கூடியது.
கொழுப்புச் சத்துகள்தான் நமது உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கின்றன. எனவேதான் கொழுப்புச் சத்தை ஆற்றலின் பெட்டகம் (Store house of energy)  என்று சொல்கிறார்கள். ஒரு கிராம் கொழுப்புச் சத்தானது 9 கலோரிகள் வெப்ப ஆற்றலைத் தருகிறது.
நமது ஒரு நாளைக்கான கொழுப்புச் சத்து தேவையானது நம் வயது, உடல் அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. தினசரி ஒரு தனி மனிதனுக்கான மொத்தக் கலோரிகள் தேவையில் 10 முதல் 15 சதவீதம், கொழுப்புச் சத்துகளில் இருந்து கிடைக்க வேண்டும். தனி மனிதனின் அன்றாட உணவில் கொலஸ்ட்ராலின் அளவு 150 மில்லி கிராமுக்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமாகக் கொழுப்புப் பொருள்களை நம் அன்றாட உணவில் சேர்ப்பதால் நமது இதயம் பாதிக்கப்படுவது பற்றியும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாவது பற்றியும் ஏற்கெனவே பார்த்தோம். ரத்தக்குழாய்களில் கொழுப்புப் படிவங்கள் சேர்வதன் மூலமாக மூளைக்குப் போகும் ரத்தத்தின் அளவு குறைந்து ஸ்ட்ரோக் (Stroke) போன்ற ஆபத்தான பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.
கொழுப்பு வகை உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது மூன்று அம்சங்களைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். இந்த வகையான கொழுப்பு முதலில் தேவைதானா என்பதை யோசிக்க வேண்டும். நாம் சாப்பிடப்போகும் கொழுப்பின் தன்மையைப் பார்க்க வேண்டும். இறுதியாகக நாம் சாப்பிடப் போகும் கொழுப்பின் அளவை கவனிக்க வேண்டும்.
தினசரி உணவில் கொழுப்பு வகை உணவுகளைச் சேர்க்கும்போது, செறிவற்ற கொழுப்பையும், செறிவுற்ற கொழுப்பையும் 2: 1 பங்கு என்ற விகிதத்தில் பயன்படுத்துவது நல்லது.
அன்றாட உணவில் செறிவுற்ற கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளான ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, தேங்காய் எண்ணெய், வெண்ணெய், நெய், வனஸ்பதி, பாமாயில், முட்டை மஞ்சள் கரு, பால், பால் சார்ந்த பொருள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது உங்கள் இதய நலனைப் பாதிக்காத வகையில் மிகவும் குறைவான அளவில் சேர்த்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது.
வனஸ்பதி
தாவர எண்ணெய்களில் ஹைட்ரஜன் அணுக்களைச் செயற்கையாகச் செலுத்தி, அவற்றைச் செயற்கையாக உறையவைத்து உருவாக்கப்படும் கெட்டியான எண்ணெய் வகைதான் வனஸ்பதி. இவ்வாறு தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் Trans fat எனப்படும். நம் நாட்டில் இதன் விலை குறைவாக இருப்பதால் சமையலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் வனஸ்பதியை அதிகம் சேர்த்துக் கொள்வது நம் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
அண்மையில், வனஸ்பதிக்கும், இதய நோய்க்குமான தொடர்பு பற்றி ஆய்வு செய்த உணவியல் வல்லுநர்களும், இதய மருத்துவர்களும், செறிவுற்ற கொழுப்பைவிட மிக அதிக அளவில் இதயத் தமனிகளைச் சிதைக்கும் ஆற்றல் வனஸ்பதிக்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளனர்.
எனவே உலகெங்கும் வனஸ்பதியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்க ஒரு இயக்கத்தையே தொடங்கியுள்ளார்கள். இதய நலத்தைக் காக்க விரும்புபவர்களும், ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்களும், அன்றாட உணவில் டிரான்ஸ் கொழுப்பு வகையில் வருகிற வனஸ்பதியைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது இதயத்தக்கு நல்லது.

கடல், உயிரினங்களின் தாய் மடி. விசித்திரங்களின் உறைவிடம்

கடல், உயிரினங்களின் தாய் மடி. விசித்திரங்களின் உறைவிடம். வினோத உயிரினங்களின் புகலிடம். உலகையே தழுவி இருக்கிறது கடல். கரையில் கால் பதித்தவர்க்கெல்லாம் தென்றலால் தாலாட்டி சுகம் தருகிறது. கவிஞர்களுக்கு கற்பனை தருகிறது. வலைவிரிப்பவர்க்கும் வாழ்க்கை தருகிறது. வானுக்கு மேகத்தை பரிசளித்து, வான்மழையாகி நமக்கு வாழ்வளிக்கிறது. வணிகத்திற்கு வழிவிடுகிறது. கோபம் கொண்டால் கொந்தளிக்கிறது. சூறாவளியாய், சுனாமியாய் சுழன்றடித்து சூறையாடி விடுகிறது.
***
அட்லாண்டிக், ஆர்க்டிக், பசிபிக் பெருங்கடல்கள் உலகை சூழ்ந்துள்ளன. இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகியவை இந்தியாவை சூழ்ந்துள்ளன. இதுதவிர குறுகிய பகுதியில் நிலம் சூழ் கடல்கள் அமைந்துள்ளன. காஸ்பியன் கடல், செத்த கடல் (டெட் சீ) போன்றவை நிலம் சூழ் கடல்களாகும்.
கடல் மேற்பரபில் வீசும் வளிமண்டல மாற்றம், புவியீர்ப்பு மற்றும் காந்தசக்தி போன்றவற்றின் காரணமாக கடலில் அலைகள் தோன்றுகின்றன. அலையால் கடல் எப்போதும் சலனபட்டுக் கொண்டே இருக்கிறது.
***

பசிபிக் பெருங்கடல் உலகின் மிகபெரிய கடலாகும். 18 கோடி ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது. உலக பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை சூழ்ந்து கொண்டிருக்கிறது. இது பூமியின் அனைத்து கண்டங்களின் கூட்டு நிலபரப்பை விட மிகபெரியதாகும்.
பசிபிக் கடலில் 2,500 தீவுகள் இருக்கின்றன. இக்கடலில் உலகின் மிக ஆழமான பகுதியான மரியானாட்ரெஞ்ச் இருக்கிறது. இது 10,911 மீட்டர் ஆழமுடையது. இக்கடலின் சராசரி ஆழம் 4,300 மீட்டராகும். பசிபிக் கடல்நீரின் வெப்பநிலை துருவபகுதிகளில் 0 டிகிரிக்கும் குறைவு. நில நடுக்கோடு பகுதிகளில் 29 டிகிரி செல்ஷியஸ்.
***
இந்திய பெருங்கடலின் சராசரி ஆழம் 3,890 மீ (12,760 அடி). இந்து மகா சமுத்திரத்தின் மிக ஆழமான பகுதி ஜாவா அகழியாகும். இதன் ஆழம் 7,450 மீட்டர். இந்தக் கடலில் ஏற்படும் தட்ப வெப்பநிலையால் இந்தியா இருமுறை மழை பெறுகிறது.
அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை வடகிழக்கு பருவ காற்றும், மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தென்மேற்கு பருவக் காற்றும் நல்ல மழையைத் தருகின்றன. அரபிக்கடலில் ஏற்படும் வன்மையான பருவக்காற்றும் மழை தருகிறது.
***
வாணிபம் செய்வதற்கு கடல் வசதியாக இருக்கிறது. அதனால் பொருளாதாரத்திலும் கடலின் பங்கு முக்கியமாகிறது. இந்திய பெருங்கடலானது மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, கிழக்காசியா ஆகிய பகுதிகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் முக்கிய கடல்பாதையை கொண்டிருக்கிறது. இது பெட்ரோலிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சவுதி அரேபியா, ஈரான், இந்தியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்திய பெருங்கடலை ஒட்டிய கரைபகுதிகளில் இருந்தே அதிகமான பெட்ரோலியம் எடுக்கபடுகிறது. இது உலக பெட்ரோலிய எரிபொருளில் 40 சதவீதமாகும்.
***

கடலானது பெட்ரோல் மட்டுமல்லாது மனிதனுக்கு தேவையான பல்வேறு வளங்களைக் கொடிருக்கிறது. உணவுத் தேவையின் பெரும்பகுதியை ஈடு கட்டுவது கடல்தான். மீன்கள், நண்டுகள், கடற்பாசி என பல உணவு பொருட்கள் கிடைக்கின்றன.
மேலும் கடற்கரை மணல்கள் பல்வேறு தாதுவளம் மிக்கவையாக இருக்கிறது. முத்துக்கள், பவளம் போன்ற ஆபரணங்களும் கடலில் இருந்து கிடைக்கின்றன. சங்கு குளிப்பதும் உண்டு. அலையில் இருந்து மின்சாரம் பெறபடுகிறது. நிலத்தில் கிடைக்காத பல்வேறு தாதுக்கள் கடலில் இருந்து எடுக்கபடுகின்றன.
***
உலகில் கடல்பகுதி 70 சதவீதம். 85 சதவீத உயிரினங்கள் கடலுக்குள்தான் வசிக்கின்றன. அவற்றில் பல விசித்திரமானவை. நீலத்திமிங்கலம் உலகில் மிகபெரிய உயிரினமாகும். நீளமான கடல்மீன் ஓர்பிஷ்(6மீ), உயரமான மீன் சன்பிஷ் (4மீ) ஆகும்.
கடல்சுறா மிகவும் விஷமும், வேட்டை குணமும் கொண்டது. தரையில் நடக்கும் மீன் இனமும் இருக்கிறது. அதன் பெயர் மட்டி ஸ்கிபர். பிளாங்டான் என்னும் மெல்லுடலி கண்ணாடிபோன்ற உடல் கொண்டது. மிகக்கொடிய விஷஜந்துக்கள் கடலில் அதிகம். கடற்பாம்புகள் அதிக விஷமுள்ளவை.
***
தட்பவெட்ப மாற்றத்தால் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் ஏற்படுகின்றன. அவை புயலாக, சூறாவளியாக மாறி நிலபகுதியை தாக்கி சேதபடுத்துகின்றன. ஆண்டுதோறும் புயல்களால் லட்சக்கணக்கானவர்கள் இறக்கிறார்கள். பேரலைகளான சுனாமியாலும் நிலம் பேரழிவைச் சந்திக்கிறது. கடந்த 2004-ல் ஏற்பட்ட ஆழிபேரலை 2 1/4 லட்சம் பேரை பலி வாங்கியது.
மனிதனின் தாறுமாறான புழக்கத்தால் கடல் மாசடைந்து வருகிறது. பிளாஸ்டிக் கடலில் கலப்பதால் ஆண்டுக்கு 10 லட்சம் கடல்பறவைகள், ஒரு லட்சம் பாலூட்டிகள், கணக்கற்ற மீன்கள் சாகின்றன. கடற்பயணத்தில் சிந்தும் எரிபொருள், கடலில் கலக்கும் கழிவுகளாலும் கடல் மாசுபடுகிறது. இவற்றாலும் உயிரினங்களுக்கு ஆபத்துதான்!
***